ADDED : மார் 14, 2026 05:30 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 'நடப்போம்; நலம்பெறுவோம்' நடைபயிற்சி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தமிழக அரசின் 'நடப்போம் ; நலம்பெறுவோம்' திட்டம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நடைபயிற்சியை ஊக்குவிக்கவும், தமிழக சுகாதார துறை மூலம், ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் செயல்படுத்தப்படுள்ளது.
இந்த திட்டத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்த திட்டம் மூலம் 8 கி.மீ., துாரம் நடைபாதை உருவாக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில், சட்டசபையில் பேசிய சுகாதார துறை அமைச்சர், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக மற்றொரு நடைபாதையை தேர்வு செய்து நடைமுறைபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தார்.
அதன்பேரில், விருத்தாசலம் நகராட்சி, ஆலடி சாலையில் உள்ள செராமிக் கல்லுாரியில் இருந்து கண்டியங்குப்பம் வரை 8 கி.மீ., துாரம் நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையில், 'நடப்போம் ; நலம் பெறுவோம் நடைபயிற்சி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
மங்கலம்பேட்டை, நல்லுார், மங்களூர், கம்மாபுரம் உள்ளிட்ட நான்கு வட்டார சுகாதாரத்துறை சார்பில் நடந்த பேரணியில், ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன், துணை சேர்மன் ராணி தண்டபாணி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
