'ராகிங்'கில் ஈடுபடும் மாணவ, மாணவியருக்கு... எச்சரிக்கை! அரசு கல்லுாரிகளில் ரகசிய குழு கண்காணிப்பு
'ராகிங்'கில் ஈடுபடும் மாணவ, மாணவியருக்கு... எச்சரிக்கை! அரசு கல்லுாரிகளில் ரகசிய குழு கண்காணிப்பு
UPDATED : ஜூலை 01, 2026 07:04 PM
ADDED : ஜூலை 01, 2026 06:50 PM

கடலுார்: கடலுார் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 'ராகிங்'கை தடுக்கும் விதமாக பேராசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 8ம் தேதி வெளியானது. இதில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி படிக்க விண்ணப்பித்து, பல்வேறு கல்லுாரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான, கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், முதலாமாண்டு வகுப்புகள் நேற்று துவங்கியது.
கல்லுாரிக்கு வரும் முதலாமாண்டு மாணவ, மாணவியர்களை சீனியர் மாணவ, மாணவியர்கள் 'ராகிங்' செய்வதை தடுக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள கல்லுாரி நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டது.
'ராகிங்' பிரச்னைக்கு ஆளாகும் மாணவ, மாணவிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இதுபோன்ற பிரச்னைகளை தடுக்கும் விதமாக கல்லுாரி கல்வி இயக்ககம், மாநிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பியது. அதில்,'ராகிங் செய்யும் மாணவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், வடலுார், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி என, 7 அரசு மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லுாரி முதல்வர் தலைமையிலான இக்குழுவில் 5 அல்லது 6 மூத்த பேராசிரியர்கள் அடங்கியுள்ளனர்.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில்,'அரசுக் கல்லுாரிகளில் 'ராக்கிங்' கை தடுக்கும் விதமாக கல்லுாரி கல்வி இயக்கம் அறிவுறுத்தலின் பேரில், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், கல்லுாரி நுழைவு வாயில், கல்லுாரி வளாகம், வகுப்பறைகளுக்கு சென்று 'ராகிங்' செய்வோரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
'ராகிங்' செய்யும் மாணவ, மாணவிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாமாண்டு மாணவர்களுக்கு உடல் மற்றும் ஆரோக்கியம், கேலி வதை தடுப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு, விளையாட்டு மற்றும் யோகா, பாடத்திட்டங்கள், அரசின் நலத்திட்டங்கள், திறன் மேம்பாட்டு தொடர்பான பயிற்சிகள், நாட்டு நலப்பணித்திட்டம், சுற்றுச்சூழல் அமைப்பு, பெண்கள் பாதுகாப்பு, தொழில் முனைவோர், மாணவர் மனநலன் ஆகியவை குறித்து ஒரு வாரத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.
