ADDED : மார் 28, 2026 06:38 AM

ராமநத்தம்: தொழுதுார் அணைக்கட்டை நீர்வளத்துறை ஆராய்ச்சி நிபுணர் குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராமநத்தம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே தொழுதுார் அணைக்கட்டு அமைந்துள்ளது.
பெரம்பலுார் மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர், வெள்ளாற்றில் பாய்ந்து தொழுதுார் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும்.
இதிலிருந்து கடலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களை சேர்ந்த, 26 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதுடன், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில், சென்னை, நீர்வளத்துறையின் மண் தன்மை மற்றும் ஆராய்ச்சி, திட்டம் மற்றும் வடிவமைப்பு நிபுணர்கள், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணக்குமார், செயற்பொறியாளர் சுரேஷ் பாபு தலைமையிலான குழுவினர் தொழுதுார் அணைக்கட்டை ஆய்வு செய்தனர்.
அப்போது, தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு, பாசன வசதி, ஷெட்டர்கள், நீர்வரத்து வாய்க்கால்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடந்தது.
மேலும், அணைக்கட்டின் அடித்தளத்திலுள்ள மண் மாதிரிகளை சேகரித்து அனுப்ப உத்தரவிட்டனர்.
அப்போது, செயற்பொறியாளர்கள் பாலமுருகன், நிறைமதி, உதவி செயற்பொறியாளர்கள் பிரசன்னா, கனிமொழி, கனகராஜ், உதவி பொறியாளர்கள் வெங்கடேசன், அர்ச்சனா, சுதர்சன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
