ADDED : அக் 23, 2024 06:35 AM

கடலுார், : கடலுார் செல்லங்குப்பம் கைத்தறி மற்றும் துணி நுால் உதவி இயக்குனர் அலுவலகம் முன் கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் தயாளன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆளவந்தார், ராஜேந்திரன், முருகவேல், துணை செயலாளர்கள் குமார், அரங்கநாதன் கண்டன உரையாற்றினர்.
இதில், கடந்த 7 மாதங்களாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரிபேட் மாநில தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கான தறி கூலியை வங்கிகள் மூலம் பெறப்படும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
கடந்த 40 ஆண்டு காலமாக உயர்த்தப்படாமல் இருக்கும் ரிபேட் மானிய தொகையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

