ஆதனுார் - குமாரமங்கலம் தடுப்பணை பாலம் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது? பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி
ஆதனுார் - குமாரமங்கலம் தடுப்பணை பாலம் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது? பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி
ADDED : மே 14, 2026 05:43 AM

காட்டுமன்னார்கோவில்: ஆதனுார் - குமாரமங்கலம் கொள்ளிடம் ஆறு தடுப்பணை கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் பயன்பாட்டிற்கு வராததால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நீர்பாசன அணை கடந்த, 1836ம் ஆண்டு கட்டப்பட்டது. கீழணை என அழைக்கப்படும் இந்த அணையின் மூலம் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 39,050 ஏக்கர்; கடலுார் மாவட்டத்தில் 92,853 ஏக்கர்; பாசன வசதி பெறுகிறது.
பருவ மழை காலங்களில் கீழணையில் இருந்து உபரி நீராக ஒவ்வொரு ஆண்டும் 20 டி.எம்.சி, நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது.
பழமையான கீழணை பாலம் கட்டி, 150 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாலும், வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து சேமித்து வைக்கும் வகையிலும், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, பொதுப்பணித் துறை அணைக்கரையின் கீழ் பகுதியில் புதியதாக, கடலுார் மாவட்டம் ஆதனுார் - தஞ்சை மாவட்டம், குமாரமங்கலம் இடையே தடுப்பணை பாலம் கட்ட கடந்த 2019, ம் ஆண்டு ரூ.495 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிலையில் கட்டுமான பணிகள் உடனடியாக துவங்கப்பட்டன. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனுார் தடுப்பனை பாலம், 1064.5 மீட்டர் நீளமும், 28 மீட்டர் அகலம் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. ஆணையில் 12 மணல் போக்கி மதகுகள் மற்றும் 72 கதவணை மதகுகள் உட்பட 84 கதவணை மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மதகுகள் அனைத்தும் மின்சாரம் மூலம் இயங்கும் படி அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் மழைக்காலங்களில் உபரி நீராக, 84 மதகுகள் மூலம், 4.56 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும். அணைக்கரை கீழணையில் இருந்து திறக்கப்படும் நீரை புதியதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையில், 0.334 டி.எம்.சி அளவில் சேமிக்க முடியும்.
இது போன்று ஆண்டுக்கு, 4 முறை கீழணையில் இருந்து நீர், திறக்கப்பட்டு, 1.072 டி.எம்.சி சேமிக்கப்படும் படி உள்ளது. புதிய தடுப்பணை மூலம் தஞ்சை, மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
மேலும் இந்த அணையில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்கால் மூலம் கடலுார் மாவட்டத்திலும், தெற்கு ராஜன்வாய்க்கால் மூலம் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 63,417 ஏக்கர் டெல்டா நிலம் பாசன வசதி பெறும்.
அதனால் ஆதனுார் - குமாரமங்கலம் தடுப்ணை பாலத்தை அனைத்து தரப்பு விவசாயிகளும் வரவேற்றுள்ளனர். அதேசமயத்தில், புதிய தடுப்பணை பணிகள் முற்றிலும் கடந்த 2024 ஆண்டே முடிவடைந்த நிலையில் பயன்பாட்டிற்கு வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தடுப்பணையில் முழு கொள்ளளவு நீர் சேமிக்கும் போது, கொள்ளிடம் ஆற்றின் இருபுறமும் கரையோரம் உள்ள ஆற்றுப்படுகை புஞ்சை நிலங்கள் மூழ்கி சேதமடையும். அதனால் விவசாயிகளிடம் இருந்து நிவாரணம் வழங்கி, நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதில் கடலுார் மாவட்டத்தில் ரூ.23.89 கோடி நிவாரணம் வழங்கி, 98 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டது.
ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் புதிய தடுப்பணை பாலம் திறப்பது தடைபட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, 135 ஏக்கர் அளவில் ஆற்றுப்படுகை நிலம் கையப்படுத்த வேண்டி உள்ளது.
இந்த நிலங்களுக்கு அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என கோரி, அம்மாவட்ட விவசாயிகள் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, தடை ஆணை பெற்றுள்ளனர். தற்போது இந்த வழக்கு மதுரை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆற்றுப்படுகை நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்த பின்னர் தான் தடுப்பணையைத் திறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு இது தொடர்பாக, மா.கம்யூ., சட்டசபையில், புதிய தடுப்பணை திறக்க கோரிக்கை வைத்தும், அப்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இரு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய தடுப்பணை தற்போது பழைய அணையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதனுார்-குமாரமங்கலம் தடுப்பணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
