/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் குற்ற சம்பவங்கள் குறையுமா?
/
நெய்வேலியில் குற்ற சம்பவங்கள் குறையுமா?
ADDED : ஜன 23, 2024 11:16 PM

கடலுார் மாவட்டம், நெய்வேலி நகரம் முழுவதும் என்.எல்.சி., நகர நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும் என்.எல்.சி., தலைமை அலுவலகம், சுரங்க நிர்வாக அலுவலகங்கள் போன்றவை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
என்.எல்.சி., நகரில் மட்டும் 20 ஆயிரம் வீடுகள் உள்ளது. என்.எல்.சி., அதிகாரிகள், நிரந்தர மற்றும் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் வசிக்கின்றனர். மேலும், நகரில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தகர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களது பாதுகாப்புக்காக நெய்வேலியில் டவுன்ஷிப் போலீஸ் நிலையம், தெர்மல் போலீஸ் நிலையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் உட்கோட்ட டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளது.
ஆனால், தமிழக அரசின் அதிரடி உத்தரவின்பேரில், நெய்வேலி நகரில் இருந்த போலீஸ் நிலையங்கள் நகரின் எல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அதையடுத்து, நெய்வேலி நகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, தாலி செயின் பறிப்பு, அடிதடி மட்டுமின்றி போலி மதுபானங்கள், லாட்டரி, கஞ்சா விற்பனை என குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நகர மக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவரும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது.
அதையடுத்து, கடலுார் எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற ராஜாராம், நெய்வேலி நகருக்கு அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு, குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும், கடந்த வாரத்தில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் என்.எல்.சி., தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மகிழ்ச்சி நீடிக்கும் வகையில், புறக்காவல் நிலையத்தின் செயல்பாடு இருக்க வேண்டும் என, நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

