பரங்கிப்பேட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பரங்கிப்பேட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
UPDATED : ஜூன் 10, 2026 12:38 PM
ADDED : ஜூன் 09, 2026 05:41 PM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தித்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக
ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை நகராட்சியாக மாறும்போது, அரசின்சிறப்பு திட்டங்கள், பல்வேறு வளர்ச்சி பணிகள் கிடைக்கும் என்பதால் பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதி வளர்ச்சியடைய வாய்ப்பு உள்ளது.
கடலுார் மாவட்டத்தில், வளர்ந்து வரும் நகரங்களில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியும் ஒன்று . பரங்கிப்பேட்டை வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாகும். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இங்கு துறைமுகம், இரும்பு தொழிற்சாலை இருந்தது. பெரியளவில் வாணிபமும் நடந்தது. ஆங்கிலேயர்களின் தலைமையிடம் சென்னைக்கு மாறிய பின் காலப்போக்கில் அனைத்து வசதிகளும் காணாமல்போனது.
தற்போது, இங்கு ரயில் நிலையம், கோர்ட், போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம், அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளம், தனியார் அனல்மின் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால், பரங்கிப்பேட்டை பேரூராட்சியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள், வியாபாரிகள், வெளி மாநில தொழிலாளர்கள் என அனைவரும் இங்கு வந்து செல்கின்றனர்.
பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் 27 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். 18 வார்டுகள் உள்ளது. சொத்து வரி, தொழில் வரி, கட்டட உரிமம் மற்றும் பிற இனங்கள் மூலம் ரூ. ஒரு கோடி வரை பேரூராட்சிக்கு வருமானம் வருகிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி பல ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாமல், உள்ளது.
தனால், அரசின் மூலம் கிடைக்க வேண்டிய பல்வேறு வசதிகள் கிடைக்கப்படாமல்
உள்ளது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது, போதுமான போக்குவரத்து வசதிகள் கிடைக்கும், அரசின் சிறப்பு திட்டங்கள்,வளர்ச்சி நிதி அதிகளவில் கிடைக்கும்.
மேலும், பரங்கிப்பேட்டை தாலு்காவாக மாறும். சார்நிலை கருவூலம் அலுவலகம் வர வாய்ப்பு உண்டு. இதனால், பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு, சிதம்பரம், புவனகிரிக்கு செல்ல வேண்டியது இல்லை. இதனால், அவர்களுக்கு காலவிரையம், பொருட்செலவும் மிச்சப்படும். பரங்கிப்பேட்டை பேரூராட்சியை, நகராட்சி அல்லது சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த மக்கள் தொகை அதிகமாக தேவைப்படும் பட்சத்தில், அரியகோஷ்டி, சி.புதுப்பேட்டை ஊராட்சிகளை, இணைக்கலாம் என கடந்தாண்டு பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, பரங்கிப்பேட்டை பேரூராட்சியை, நகராட்சியாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
