மாவட்டத்தில் நடமாடும் ஆலோசனை மையம் மீண்டும் செயல்படுத்தப்படுமா? பள்ளி மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு தேவை
மாவட்டத்தில் நடமாடும் ஆலோசனை மையம் மீண்டும் செயல்படுத்தப்படுமா? பள்ளி மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு தேவை
UPDATED : மார் 16, 2026 09:48 AM
ADDED : மார் 16, 2026 04:22 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மீண்டும் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் செயல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த காலங்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறின. இது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதவிர உளவியல் ரீதியான பாதிப்பு, மனக்குழப்பம் போன்ற காரணங்களாலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், நடமாடும் ஆலோசனை மையம் ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி கடந்த, 2013-2014ம் ஆண்டு சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கடலுார் உட்பட 10 மாவட்டங்களில் ஆலோசனை மையம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதற்காக ஒரு வேன் ஒதுக்கப்பட்டு, பயிற்சி பெற்ற உளவியல் ஆலோசகர், உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
ஒவ்வொரு நடமாடும் ஆலோசனை மையமும் சுற்றியுள்ள 3 அல்லது 4 மாவட்டங்களை கவனிக்க கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடலுார் மாவட்டத்தில் 1,400க்கும் மேற்பட்ட அரசு துவக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
மாவட்டத்தில் நடமாடும் ஆலோசனை மைய வாகனம் மூலமாக தேர்வில் பின் தங்கிய மாணவர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு நேரிடையாக சென்று ஆலோசனை வழங்கி தீர்வு காணப்பட்டது.
இதற்கிடையே கடந்த, 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நடமாடும் ஆலோசனை மையம் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகும் இந்த மையத்தை மீண்டும் செயல்படுத்த அதிகாரிகள் முன் வரவில்லை.
இதனால், நடமாடும் ஆலோசனை மைய வாகனம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் காட்சிப் பொருளாக திறந்த வெளியில் நிறுத்தப்பட்டு வீணாகிறது.
வரும் கல்வியாண்டு மு தல், ஆலோசனை மையத்தை மீண்டும் துவங்கினால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதற்கு கல்வித்து றை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அதிகாரி ரமேஷ் கூறுகையில், 'நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் தற்போது பயன்பாட்டில் இல்லை. வரும் கல்வியாண்டு முதல், மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
