/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் திறந்து வைத்த நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா: விருத்தாசலம் மாணவர்கள், வாசகர்கள் எதிர்பார்ப்பு
/
முதல்வர் திறந்து வைத்த நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா: விருத்தாசலம் மாணவர்கள், வாசகர்கள் எதிர்பார்ப்பு
முதல்வர் திறந்து வைத்த நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா: விருத்தாசலம் மாணவர்கள், வாசகர்கள் எதிர்பார்ப்பு
முதல்வர் திறந்து வைத்த நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா: விருத்தாசலம் மாணவர்கள், வாசகர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 27, 2025 04:21 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 1.7 கோடி ரூபாயில் புதிதாக கட்டி, முதல்வர் திறந்து வைத்த நுாலகம் பயன்பாட்டிற்குவராமல் மூடிக் கிடப்பதால் மாணவர்கள், வாசகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விருத்தாசலம் நகராட்சி, 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு, கடந்த 1955ம் ஆண்டு முதல், வாடகை கட்டடத்தில் கிளை நுாலகம் இயங்கி வருகிறது. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள வாடகை கட்டத்தின் முதல் தளத்தில், 23 ஆண்டுகளாக இயங்கியது. சமீபத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இங்கு, 9,000 உறுப்பினர்கள், 150க்கும் மேற்பட்ட புரவலர்கள் உள்ளனர். தமிழக அரசின் நுாலகத்துறை மாவட்ட மைய நுாலகம் மூலம் சிறுவர் புத்தகங்கள், வரலாறு, சிறுகதைகள், புதினங்கள், ராமாயணம், மகாபாரதம், அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் உட்பட 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கியது.
நுாலகத்துறை, புரவலர் சந்தா, உறுப்பினர் சந்தா ஆகியவற்றின் மூலம் வாங்கிய இரும்பு ரேக்குகளில், புத்தகங்களை அடுக்கி வைக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது, 1 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் புத்தகங்களை அடுக்கி வைக்க முடியாமலும், இட நெருக்கடியில் வாசகர்கள், மாணவர்கள் வந்து நுால்களை வாசிக்க முடியாமல் சிரமமடைந்தனர். இதையடுத்து கிளை நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டித்தர இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.
அதன்படி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் நுாலகம் கட்ட, கடந்த 2012ல் இடம் தேர்வு செய்யப்பட்டது. 1.7 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தை, கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து சென்றார்.
ஆனால், ஒரு மாதமாகியும் புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. நுாலகத்திற்கு சென்றுவர தனியாக பாதை இல்லாமல், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வர வேண்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பள்ளி நிர்வாகம் தடை விதித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நுாலகத்துறை புகாரின் பேரில், மாவட்ட கல்வி அலுவலகத்தின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவரை அகற்றி, புதிதாக இரும்பு கேட் அமைக்கப்பட்டது. ஆனால், முகப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் சிமென்ட் சிலாப் போடப்படாததால், புத்தகங்களை எடுத்து வரும் வாகனங்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரிடம் பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. சுமார் 69 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நுாலகத்திற்கு, 1.7 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டியும் பயன்படுத்த முடியாத அவலம் தொடர்கிறது.
எனவே, நுாலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.