ADDED : மே 27, 2026 03:21 AM

பெண்ணாடம்: கொத்தட்டையில் பூட்டிக்கிடக்கும் நுாலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், நூலகக் கட்டடம் கட்டப்பட்டது. நூலகத்திற்கு ஒன்றிய அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் மாத, வார இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் வரும். இது தவிர, பொது அறிவு புத்தகங்கள், மாணவ, மாணவியருக்கு பயன்படும் இந்தியா மற்றும் உலக நாடுகளில் நடந்த வரலாற்று தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன.
கிராமங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை தங்கள் அறிவுப்பசியை போக்கவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் வந்து செல்வர். ஆனால், ஓரிரு மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நுாலகம் நாளடைவில் காட்சிப்பொருளாக பூட்டி வைக்கப்பட்டது. இதனால் நுாலகத்தில் உள்ள புத்தகங்கள், தளவாட பொருட்கள் பாழாகிறது. ஆனால் அவ்வப்போது புனரமைக்கும் பணிகள் நடக்கிறது.
எனவே, இளைஞர்கள், மாணவர்கள் நலன்கருதி, கொத்தட்டை பூட்டிக்கிடக்கும் நுாலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
