ADDED : ஜூலை 04, 2026 04:53 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் நட்ட மரக்கன்றுகள் பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பசுமை மேம்பாட்டு திட்டத்தில், 19 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளனர்.
முதல் கட்டமாக கடந்த வாரம் திருக்கண்டேஸ்வரம் பூண்டியம்மன் கோவில் குளத்தில் 300 மரக்கன்றுகளை சேர்மன் ஜெயந்தி நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். அதை முறையாக பராமரிக்காததால் பல கன்றுகள் காய்ந்தன. இந்நிலையில் வசந்தம் நகரில் நேற்று, 500 மரக்கன்றுகளை நட முடிவு செய்தனர். அங்கு தண்ணீர் வசதி இல்லாததால், நேற்று நடும் பணி நடக்கவில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' பல லட்சம் ரூபாய் செலவு செய்து மரக்கன்றுகளை, நட்டு போட்டோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவதோடு பணி முடிந்ததாக அதிகாரிகளும்,மக்கள் பிரதிநிதிகளும் நினைக்க கூடாது. கடுமையான வெயில் அடிப்பதால் நடும் கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி, அதை காக்க வேண்டும்,' என்றனர்.
