ADDED : ஆக 30, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் தத்தளித்த தொழிலாளியை கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்தினர் பத்திரமாக மீட்டனர். கடலுார், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் விடுமுறை நாளான நேற்று மாலை ஏராளமான பொதுமக்கள் கூடினர். அப்போது, புவனகிரி அடுத்த கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேலவன்,32; கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.
திடீரென அவரை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றதால் உயிருக்கு போராடினார். இவரின் அலறல் சத்தம் கேட்கவே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்தினர், கடலில் இறங்கி உயிருக்கு போராடிய வேலவனை மீட்டு கரைக்கு அழைத்து வந்து அறிவுரை கூறி அனுப்பினர்.
