'மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு'குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
'மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு'குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 24, 2025 01:19 AM
அரூர், : அரூரில், மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் திருமலை, முருகன், ராஜ்குமார், செல்வராஜ் உள்ளிட்ட விவசாயிகள் பேசியதாவது:தற்போது, அரூர் வருவாய் கோட்டத்தில், நெல் அறுவடை மும்முரமாக நடந்து வருவதால், அரூரில் அரசு சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர். இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ., சின்னுசாமி, விவசாயிகளின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் செயல்படும் தனியார் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை நிர்வாகம் பீணியாறு கரையை உடைத்து, தண்ணீரை எடுத்துக் கொண்டு, கழிவு நீரை ஆற்றில் விட்டுள்ளனர். கடந்த குறைதீர் கூட்டத்தில், அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பீணியாறு கரை, கடந்த, 26ல், அளவீடு செய்யப்படும் என ஆர்.டி.ஓ., உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை பீணியாறு கரை அளவீடு செய்யப்படவில்லை. பெயரளவிற்கு குறைதீர் கூட்டம் நடத்துவதாக புகார் கூறிய விவசாயிகள், கூட்டத்திலிருந்து வெளியேறுவதாக தெரிவித்தனர்.
அவர்களிடம் பேசியஆர்.டி.ஓ., சின்னுசாமி, வரும், 7ல் பீணியாறு கரை அளவீடு செய்து, அதன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.
