வாணியாறு அணையிலிருந்துபாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
வாணியாறு அணையிலிருந்துபாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ADDED : பிப் 27, 2025 01:57 AM
பாப்பிரெட்டிப்பட்டிபாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை, முழு கொள்ளளவான, 65 அடி நிரம்பியது. அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு அனைத்து ஏரிகளும் நிரப்பப்பட்டன. மழையால் விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் திறக்கப்படும் அணை திறக்கப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று அணையிலிருந்து மாவட்ட கலெக்டர் சதீஷ், தி.மு.க., - எம்.பி., மணி, எஸ்.பி., மகேஸ்வரன், தி.மு.க., மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர்
இதில், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு, சுழற்சி முறையில் நேற்று முதல், மே, 1ம் தேதி வரை, 65 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம், விநாடிக்கு, 95 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வலதுபுற கால்வாயில், 50 கன அடி, இடதுபுற கால்வாயில், 45 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.
நிகழ்ச்சியில், அரூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் கிருபா, பேரூராட்சி தலைவர் மாரி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் டாக்டர் பழனிசாமி, சுப்பிரமணி, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
