/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 80,000 கன அடியாக சரிவு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 80,000 கன அடியாக சரிவு
ADDED : ஆக 04, 2024 01:49 AM
ஒகேனக்கல், கார்நாடக அணைகளில் திறக்கப்படும் உபரி நீர் குறைப்பால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 80,000 கன அடியாக சரிந்தது.
கர்நாடக, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு, உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி,
கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று கபினியில் இருந்து வினாடிக்கு, 33,771 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 73,500 கன அடி என மொத்தம், 91,169 கன அடி உபரி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழக எல்லையான
பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் இரவு, 6:00 மணிக்கு வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 80,000 கன அடியாக சரிந்தது.
அதிக நீர்வரத்தால், ஒகேனக்கல்லில், ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைப்பாதையை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடுகிறது. கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. நேற்று, 19 வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது. ஒகேனக்கலுக்கு சுற்றுலா வரும் வாகனங்கள் மடம் செக்போஸ்டிலேயே தடுத்து, போலீசார் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால், ஆடிப்பெருக்கான நேற்று,
ஒகேனக்கல் வெறிச்சோடியது.