ADDED : ஜூலை 10, 2026 04:53 AM
தர்மபுரி:தர்மபுரி
மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கக்கன்ஜிபுரத்தை சேர்ந்தவர்
தினேஷ்குமார், 32. இவர், தடங்கத்திலுள்ள, 'ராசி கம்போர்ட் லாட்ஜ்'
மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 6ல் தினேஷ்குமார் பணியில்
இருந்தபோது, இரவு, 11:00 மணிக்கு ஹரீஷ், 26, என்பவரும், அவருடன், 25
முதல், 30 வயதுடைய வாலிபர்கள் இருவர் மற்றும், 25 வயதுடைய பெண்
ஒருவர் கைக்குழந்தையுடன் வந்தனர். பின், ஹரீஷ் என்பவர் என்
மனைவியும், நானும் தங்க, ஒரு அறை வேண்டும் என கேட்டார்.
அப்போது,
தினேஷ்குமார் அடையாள அட்டை கேட்டபோது, ஹரீஷ் என்ற பெயரிட்ட ஆதார்
கார்டை காட்டி விட்டு, பெண்ணிற்கு அடையாள அட்டை எதுவும் காட்டவில்லை.
'உங்கள் மனைவி என்பதற்கு அடையாள அட்டை எதுவும் இல்லையா' என
தினேஷ்குமார் கேட்டதால், ஆத்திரமடைந்த ஹரீஷ், 'என்னிடமே அடையாள
அட்டை கேட்கிறாயா' எனக்கேட்டு, உடன் வந்தவர்களுடன் சேர்ந்து,
தினேஷ்குமாரை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியுள்ளார். புகார் படி,
அதியமான்கோட்டை போலீசார், ஹரீஷ் மற்றும் உடன் வந்த வாலிபர்கள்
உள்ளிட்ட, 3 பேரை தேடி வருகின்றனர்.
