/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொதுவேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் பாதிப்பு
/
பொதுவேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் பாதிப்பு
ADDED : பிப் 13, 2026 07:58 AM

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடந்தது. மாநில அரசுகள், தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்கமால் நிறைவேற்றப்பட்ட, 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு வாரம், 5 நாட்கள் வேலை, அரசுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது.
தமிழகத்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன. கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலை இந்தியன் வங்கி முன், அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதேபோல, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த, 189 பேர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி பணிகள் பாதித்தன.
தேன்கனிக்கோட்டை தபால் நிலையம் முன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா மற்றும் ராஜா தலைமையில் போராட்டம் நடந்தது. ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பழைய மாநகராட்சி அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடந்தது.
* தர்மபுரி தலைமை தபால் நிலையம் அருகே, தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சி.ஜ.டி.யு., மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். அரூர் கச்சேரிமேட்டில், கட்டுமான தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் பழனி தலைமையில், மறியல் போராட்டம் நடந்தது. பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் முன், தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஏ.ஐ.சி.சி.டி.யு., மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து ரயில் மறியல் செய்ய முயற்சித்த, 67 பேரை, பொம்மிடி போலீசார் கைது செய்தனர். பென்னாகரத்தில் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட, 260 தொழிலாளர்கள், விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

