/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேதமான ஒன்றிய அலுவலர் குடியிருப்புகள்
/
சேதமான ஒன்றிய அலுவலர் குடியிருப்புகள்
ADDED : செப் 28, 2025 02:21 AM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடியிருக்க ஒன்றிய அலுவலகம் முன்பு, 10க்கும் மேற்பட்ட அலுவலர் குடியிருப்புகள் உள்ளன. இதை கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர பராமரிக்காமல் அரசு விட்டு விட்டது. இதனால் குடியிருப்புகள் அனைத்தும் சேதமாகி பாழடைந்து, அலுவலர்கள் தங்க முடியாத நிலையில் உள்ளது. இந்த சேதமான குடியிருப்பு பகுதிகளில் பகல், இரவு நேரங்களில், கஞ்சா, மது விற்பனை இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இது குறித்து, சமூக ஆர்வலர் ராஜாமணி கூறியதாவது: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அலுவலர்கள் குடியிருப்புகள் உள்ளன. இவைகள் சேதமானதால், யாரும் குடியிருக்க முடியாமல் உள்ளது. எனவே இந்த சேதமான கட்டடங்களை அப்புறப்படுத்தி, அலுவலர்கள் தங்க, புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.