/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பதவி உயர்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ.,கள்குமுறல்
/
பதவி உயர்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ.,கள்குமுறல்
ADDED : செப் 05, 2011 11:56 PM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் ஏட்டாக இருந்து எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் உள்ளிட்ட எஸ்.ஐ.,க்கான பணிகளை வழங்காமல் அதிகாரிகள் புறக்கணித்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், அரூர், தர்மபுரியில், 32 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. அனைத்து போலீஸ் ஸ்டேஷனிலும் எஸ்.ஐ., பணியிடம் முழுமையாக நிரப்பபட்டுள்ளது. ஆனால், இரண்டாம் நிலை காவலர் மற்றும் தலைமை காவலர் பதவிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. மார்ச் மாதம் மாவட்டத்தில், 82 தலைமை காவலர்களுக்கு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்பட்டது. பதவி உயர்வுக்கான உத்தரவு கிடைத்தும் இரு மாதங்களாக ஏற்கனவே செய்த பணிகளே வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.,க்கான எவ்வித அதிகாரமும், பணி மாற்றமும் வழங்கப்படாமல் உள்ளது. போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள சென்ட்ரி, எழுத்தர் பணிகளில் மீண்டும் பதவி உயர்வு பெற்ற தலைமை காவலர்கள் பணி செய்யுமாறு அதிகாரிகள் நிர்பந்தம் செய்துள்ளதாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ., ஒருவர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணாபுரம், காரிமங்கலம், மகேந்திரமங்கலம், பாலக்கோடு ஆகிய போலீஸ் நிலையத்தில் ரெகுலர் எஸ்.ஐ.,க்களுக்கும் பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ.,க்களும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ.,க்களை வழக்கு பதிவு செய்ய விடுவதில்லை மற்றும் பீல்டு ஒர்க்குடன் கூடிய எழுத்துப் பணி வழங்குவதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ.,க்கள் முன்வைத்துள்ளனர். மேலும், வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மாற்றி, எஸ்.ஐ., பதவிக்கான பணி அதிகாரத்தை வழங்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ., ஒருவர் கூறியதாவது: தங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தாலும், அதற்கான அதிகாரங்களை வழங்காமல் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். தங்களுக்கு ஒதுக்கப்படும் பணியால் போலீஸ் ஸ்டேஷனில் மற்ற போலீஸார் மதிப்பதில்லை. எஸ்.ஐ., பதவிக்கான தனி பயிற்சி வழங்கப்படாமல் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். போலீஸ் அதிகாரிகள் தங்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.