/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நீர் வள மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு
/
நீர் வள மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு
ADDED : ஆக 29, 2011 11:42 PM
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த நல்லானூர் ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் மத்திய அரசின் புவி அறிவியல் துறை சார்பில் தேசிய நீர் வள மேம்பாடு குறித்த புவி அமைப்பு பொறியியல் துறை சார்பில் தொடு உணர்வு மற்றும் புவியியல் தகவல் பரிமற்ற முறைகள் பயன்பாடு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கு நிறைவு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் தொல்காப்பிய அரசு தலைமை வகித்தார். இயக்குனர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கட்டிடவியல் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஹைதராபாத் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானி சுப்பிரமணியன் பேசியதாவது: நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கவும், நிலையாக வைத்திருக்கவும், தொடு உணர்வு மற்றும் புவியியல் தகவல் பரிமாற்ற முறை உதவுகிறது. வரை படம் தயாரித்து அதன் வாயிலாக நிலத்தடி நீரின் அளவை 83 சதவீதத்தில் இருந்து 95 சதவீதமாக அதிகரிக்க முடியும். ராஜிவ் தேசிய குடிநீர் திட்டம் வாயிலாக இத்திட்டத்தின் செயல்படுவதற்கான உதவியை பெறலாம். இந்த தொழில் நுட்பம் வாயிலாக நிலத்தடி நீர் மட்டத்தினை அதிகரிக்க மட்டுமில்லாமல் வன வளம், நீர் வளம், மண் வளம், கடல் நீர் வளம் ஆகிய வளங்களையும் வேளாண் துறை வளத்தை மேம்படுத்தலாம்.
சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்த தொழில் நுட்பத்தை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பாலைவனம் முதல் மலைப்பிரதேசங்கள் வரையிலும் கடற்கரையில் இருந்து சமவெளிகள் வரையிலும் மற்ற பகுதிகளிலும் பயன்படுத்தலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். புவி அமைப்பியல் விரிவுரையாளர் கருணாநிதி நன்றி கூறினார்.