ADDED : ஜூன் 03, 2025 01:44 AM
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஹரிஹர நகரை சேர்ந்தவர் மோனிகா, 27. மருத்துவர். தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த அவர் அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வரவில்லை. நள்ளிரவில் செவிலியர்கள் அவரை அழைத்தும், மொபைலில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை.
சந்தேகமடைந்த அவர்கள், அறை ஜன்னல் வழியாக பார்த்த போது மயங்கிய நிலையில் மோனிகா கிடந்துள்ளார்.
கதவை உடைத்து ஊழியர்கள் உள்ளே சென்றபோது, மயங்கிய மோனிகா அருகே, துாக்க மாத்திரை பாட்டில் இருந்தது. அளவிற்கு அதிகமாக துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவருக்கு, சிகிச்சை அளித்த நிலையில் நேற்று இறந்தார். அவருக்கு விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக, சக ஊழியர்களிடம் கூறிவந்த நிலையில் நேற்று துாக்க மாத்திரை தின்று, தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.