/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கே.ஆர்.பி., அணைக்கு தொடர் நீர்வரத்து 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
/
கே.ஆர்.பி., அணைக்கு தொடர் நீர்வரத்து 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி., அணைக்கு தொடர் நீர்வரத்து 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி., அணைக்கு தொடர் நீர்வரத்து 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : மே 23, 2025 01:35 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தொடரும் நீர்வரத்தால் நேற்று, 3வது நாளாக, தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சியால், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெய்த மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 20ல் வினாடிக்கு, 4,208 கன அடியாக நீர்வரத்து இருந்தது.
தற்போது மழையின்றி நீர்வரத்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம், 3,268 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 2,020 கன அடியாக சரிந்தது.
அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,944 கன அடி நீர் திறக்கப் பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.90 அடியாக இருந்தது.
அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால், 3வது நாளாக நேற்றும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை என, 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என்றும், ஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கே.ஆர்.பி., அணை தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி ஆற்றில் தண்ணீர் செல்வதால், 3வது நாளாக அணை பகுதிக்கு வர, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.