ADDED : செப் 24, 2024 08:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த காணிகாரஹள்ளியை சேர்ந்த விவசாயி பழனி, 48. அதே பகுதியை சேர்ந்த அண்ணன் உறவுமுறையானவர் சோழகவுண்டர், 57. இருவருக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், 2017 நவ., 4ல் பழனி அரிவாளால் வெட்டியதில், சோழகவுண்டர் உயிரிழந்தார். தொப்பூர் போலீசார், பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நேற்று முடிந்த நிலையில், விவசாயி பழனிக்கு, நீதிபதி மோனிகா ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் சக்திவேல் ஆஜராகினார்.