/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்த அதிகாரிகள்
/
புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்த அதிகாரிகள்
ADDED : அக் 25, 2025 01:41 AM
இண்டூர்: சர்ச்சைக்குரிய நிலத்தில் புதைக்கப்பட்ட ஆண் உடலை, உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆறு வாரங்களுக்கு பின் தோண்டி எடுத்து, பொது மயானத்தில் புதைக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே தளவாய்ஹள்ளி பஞ்., நேரு நகரில் வசிப்பவர் காவேரியம்மாள், 60.
இவருக்கு சொந்தமான நிலத்தில், பேடரஹள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம், 60, என்பவர் உடலை, செப்., 15-ல் அவரது உறவினர்கள் மற்றும் பேடரஹள்ளி கிராம மக்கள் வருவாய் துறை, போலீசார் அனுமதியை மீறி புதைத்தனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காவேரியம்மாள் வழக்கு தொடுத்தார். இதில், உடலை தோண்டி எடுத்து, பொது மயானத்தில் புதைக்க நீதிமன்றம் உத்தர விட்டது.
இந்த தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், நல்லம்பள்ளி தாசில்தார் பிரசன்னமூர்த்தி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஆறு வாரங்களுக்கு பின், உடலை நேற்று மாலை தோண்டி எடுத்து தளவாய்ஹள்ளி பொது மயானத்தில் புதைக்க முடிவு செய்தனர்.
இதற்கு தளவாய்ஹள்ளி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் உடலை தோண்டி எடுத்து, 17 கி.மீ., தொலைவில் தர்மபுரி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பொது மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்தனர்.

