ADDED : மார் 17, 2026 08:09 AM
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி அருகே உள்ள மருலுக்காரன்கொட்டாயை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் வெங்கடேசன், 51, பெயின்டர். நேற்று தன் உறவினரின், 13வது நாள் ஈம காரியத்திற்காக தனியார் சுற்றுலா பஸ்ஸில் ஒகேனக்கல் வந்துள்ளார்.
மதியம், 2:00 மணியளவில் ஒகேனக்கல் முதலை பண்ணை அருகே உள்ள ஏத்த மடுவு பகுதி காவிரியாற்றில் குளித்தார். அப்போது இவர், ஆழமான பகுதியில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனடியாக உறவினர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், பரிசல் ஓட்டிகளின் உதவியோடு, காவிரியாற்றில் மூழ்கிய வெங்கடேசனை சடலமாக அதே இடத்தில் மீட்டனர். இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
