ADDED : ஏப் 20, 2026 04:51 AM
அரூர்:தேர்தல்
கமிஷன் தடையை மீறி, அரூர் தொகுதியில், வாக்காளர்களுக்கு, 8,000
ரூபாய் மாதிரி கூப்பன்களை, தி.மு.க.,வினர் வழங்கி வருகின்றனர்.
சட்டசபை
தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சி அமைத்தால்,
இல்லத்தரசிகளுக்கு, 8,000 ரூபாய் வழங்கப்படும். இதில், வீட்டுக்கு
தேவையான பிரிஜ், வாசிங்மெஷின், இன்டக்ஷன் ஸ்டவ், மைக்ரோவேவ் ஓவன்
உள்ளிட்ட
பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி
அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம்,
இந்த கூப்பன் தொடர்பாக பேசி வருகிறார். இந்நிலையில் பல்வேறு
தொகுதிகளில், தி.மு.க.,வினர், 8,000 ரூபாய்க்கான மாதிரி கூப்பன்களை
வீடு, வீடாக வினியோகம் செய்து வந்தனர். இதை தடுத்து நிறுத்தக்கோரி,
அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, 8,000 ரூபாய் மாதிரி கூப்பன்களை வினியோகம் செய்ய தேர்தல்
கமிஷன் தடை விதித்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர்
(தனி) தொகுதியில் பல்வேறு இடங்களில், தி.மு.க.,வினர் கடந்த
ஐந்தாண்டு, தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்த துண்டு
பிரசுரங்களுடன், 8,000 ரூபாய்க்கான மாதிரி கூப்பன்களை வீடு, வீடாக
வினியோகம் செய்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 8,000
ரூபாய் மாதிரி கூப்பன்களை வினியோகம் செய்யும், தி.மு.க.,வினரை
போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதுடன், அவர்கள் மீது வழக்கும் பதிவு
செய்வதில்லை என, அ.தி.மு.க., - த.வெ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்
புகார் தெரிவித்துள்ளனர்.
