ADDED : அக் 05, 2024 05:58 AM
அரூர்: அரூர் பகுதியில், தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 3,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
அரூரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 1,000 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் விலை அதிகரித்து ஒரு கூடை தக்காளி, 1,600 ரூபாய்க்கு விற்பனையானது. உடுமலைப்பேட்டை பகுதியில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதே போல், ஆந்திராவில் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வடமாநிலங்களுக்கு அதிகளவில் தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. இதுவும், விலை உயர்வுக்கு காரணம். மழையின்மை, கடும் வெயிலால் மண்டிகளுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.