/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'மலை கிராமங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் எடுத்து செல்ல கழுதைக்கு மாற்றாக டிராக்டர்'
/
'மலை கிராமங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் எடுத்து செல்ல கழுதைக்கு மாற்றாக டிராக்டர்'
'மலை கிராமங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் எடுத்து செல்ல கழுதைக்கு மாற்றாக டிராக்டர்'
'மலை கிராமங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் எடுத்து செல்ல கழுதைக்கு மாற்றாக டிராக்டர்'
ADDED : மார் 18, 2024 03:15 AM
தர்மபுரி: லோக்சபா தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், மனு தாக்கல் மற்றும் பிரசாரம் செய்யும்போது, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
முன்னதாக, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தர்மபுரி லோக்சபா தொகுதி, தர்மபுரி மாவட்டத்தில், 5 சட்டசபை தொகுதிகள், சேலம் மாவட்டத்தில் மேட்டூர் சட்டசபை தொகுதி என, 6 சட்டசபை தொகுதிகளை கொண்டது. இதில், ஆண்கள், 7,64,878, பெண்கள், 7,47678 மற்றவர்கள், 176 என மொத்தம், 15,12,732 வாக்காளர்கள் உள்ளனர். இத்தேர்தலில், 18 முதல், 19 வயதுள்ள முதன்முறை வாக்காளர்கள், 32,535 பேர் வாக்களிக்க உள்ளனர். மேலும், 100 வயதிற்கு மேற்பட்ட, 114 வாக்காளர்கள் உள்ளனர். லோக்சபா தொகுதி முழுவதும், 1,805 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில், 292 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானதாக அடையாளம் காணப்பட்டு, கூடுதல் போலீசார், நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 45 வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினரும், 45 நிலையான கண்காணிப்பு குழுவினர், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் சின்னங்கள், கொடிகள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அழிக்கவும், அப்புறப்படுத்தவும் அரசியல் கட்சியினருக்கு, 3 நாட்கள் கால அவகாசம் இருப்பதால், அதன் பிறகு ஊழியர்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். மேலும், தேர்தல் பிரசாரங்களில், 18 வயதிற்கு உட்பட்டவர்கள், குழந்தைகளை ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில், 11,660 அரசு அலுவலர்கள் மற்றும், 1,300 போலீசார் சோதனைச்சாவடி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரிசு பொருள், பண பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை, 'C vigil' என்ற 'ஆப்' மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அதன் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில், கோட்டூர் மலை, ஏரிமலை மலை போன்ற மலை கிராமங்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கடந்த தேர்தல்களில் கழுதைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. இத்தேர்தலில் முதல் முறையாக அதற்கு மாற்றாக, டிராக்டர்கள் மூலம் ஓட்டுப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

