/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் குழாய் உடைப்பு: 20 கிராமங்கள் பாதிப்பு
/
குடிநீர் குழாய் உடைப்பு: 20 கிராமங்கள் பாதிப்பு
ADDED : செப் 27, 2024 01:30 AM
குடிநீர் குழாய் உடைப்பு: 20 கிராமங்கள் பாதிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, செப். 27---
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை புதிய, 4 வழிச்சாலை விரிவாக்க பணி நடக்கிறது. இதற்காக அப்பகுதியில் பொக்லைன் மூலம் சாலையோரங்களில் குழி தோண்டப்படுகிறது. அப்பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதும், தாமதமாக சரி செய்வதும், குடிநீரின்றி மக்கள் அவதிப்படுவதும், வாடிக்கையாகி உள்ளது. நேற்று காலை, சாமியாபுரம் கூட்ரோட்டில், சாலை விரிவாக்க பணிக்காக, பொக்லைன் மூலம் குழி தோண்டும் போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் பீறிட்டு வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணானது.
பிரதான குழாய் என்பதால் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்ட நிலையில், இதன் மூலம் குடிநீர் பெற்று வரும் பட்டுகோணாம்பட்டி, மஞ்சவாடி ஊராட்சிகளுக்கு உட்பட்ட காளிப்பட்டை, மஞ்சாவாடி, சின்ன மஞ்சவாடி, லட்சுமாபுரம், கோம்பூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் செல்லவில்லை. இதனால் மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே, உடைந்த குழாயை சரிசெய்து, விரைந்து குடிநீர் வழங்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.