/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வரட்டாறு தடுப்பணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு
/
வரட்டாறு தடுப்பணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு
ADDED : பிப் 18, 2026 07:32 AM

அரூர்: வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணையில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. தடுப்பணையின் மொத்த கொள்ளளவு, 34.45 அடி. கடந்தாண்டு நவ., 26ல் தடுப்பணை நிரம்பியது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று தடுப்பணையில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து தடுப்பணை மதகின் ஷட்டரை பிடித்து, தண்ணீரை திறந்து வைத்தார். ஆர்.டி.ஓ., செம்மலை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தடுப்பணையில் இருந்து, 40 நாட்களுக்கு வினாடிக்கு, 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். 25 ஏரிகள் மூலம், வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, நாச்சினாம்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி, மாவேரிப்பட்டி, கம்மாளம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, புதுார் ஆகிய, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறும்.
விவசாயிகள் ஏமாற்றம்
வழக்கமாக வரட்டாறு தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டவுடன் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கும். இதற்காக நேற்று தடுப்பணை அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு காலை, 10:22 மணிக்கு கலெக்டர் சதீஸ் வந்தார். பின், 10 நிமிடங்களில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, 10:32 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், ஆலோசனை கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க காத்திருந்த விவசாயிகள் மற்றும் வள்ளிமதுரை கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

