/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அங்கித்திவாரி காரை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி
/
அங்கித்திவாரி காரை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி
ADDED : மார் 29, 2024 12:13 AM
திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி காரை விடுவிக்க கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி 2023 டிச.,1ல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதன்படி அவர் கையெழுத்திட்டு வருகிறார். அங்கித்திவாரி கைது செய்யப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட காரை விடுவிக்க கோரி அங்கித்திவாரியின் மனைவி தரப்பில் திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 15 நாட்களுக்கு முன் மனு செய்யப்பட்டது.
அதில் வெயில், மழையால் கார் சேதமடையும் என்பதால் தன்னிடம் ஒப்படைக்க கோரியும், விசாரணைக்கு தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கித் திவாரியிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார். முதன்மை குற்றவியல் நடுவர் மோகனா, மனுவை தள்ளுபடி செய்தார்.

