ADDED : ஏப் 27, 2024 01:25 AM

பழனி:பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு வரும் பக்தர்களின் மருத்துவ அவசர தேவையை பூர்த்தி செய்ய வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் நவீன உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு வந்தது.
இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். மலை பாதை, கூட்ட நெரிசலில் செல்லும் போது சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இவர்களுக்கு முதலுதவி அளிக்க, முருகன் கோவில் அடிவாரம் வின்ச் ஸ்டேஷன், படிப்பாதை இடும்பன் கோவில் அருகே மருத்துவமனைகள் உள்ளன.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய கோளாறுகள் உள்ளவர்களுக்கு அதிக பிரச்னை ஏற்படுகிறது. இவர்களுக்கு அவசர முதலுதவி சிகிச்சை கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையங்களில் அளிக்கப்படுகிறது.
ஆனால், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டனர். பழனி முருகன் கோவில் சார்பாக, 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் சேவை பக்தர்களின் வசதிக்காக வழங்கப்பட்டது. இதில், அவசர உதவிக்கான 30 வகையான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாத விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ஆம்புலன்ஸ் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

