தபால் ஓட்டுப்பதிவு செய்த 3 ஆயிரம் சீருடை பணியாளர்கள்
தபால் ஓட்டுப்பதிவு செய்த 3 ஆயிரம் சீருடை பணியாளர்கள்
ADDED : ஏப் 19, 2026 10:16 PM

திண்டுக்கல்;மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் நேற்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்த தபால் ஓட்டுப்பதிவில் சீருடை பணியாளர்கள் 3 ஆயிரம் பேர் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
பழநி சட்டசபை தொகுதியில் போலீசார், வெளி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார், அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்கள் என 600 பேரும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 170 பேரும், ஆத்துார் தொகுதியில் 500 பேரும், நிலக்கோட்டை (தனி) தொகுதியில் 300 பேரும், நத்தம் தொகுதியில் 230 பேரும், திண்டுக்கல் தொகுதியில் 880 பேரும், வேடசந்துார் தொகுதியில் 200 பேர் என மொத்தம் 2,880 பேர் நேற்று ஒரே நாளில் தங்களது தபால் ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் காலை 9:00 மணி முதல் போலீசார் தங்களது ஓட்டளிக்க நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். பிற மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் 24 பேர் ஓட்டு பட்டியலில் பெயர் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர். பார்வை குறைபாடு உள்ள போலீஸ்காரர் ஒருவர் உதவியாளர் மூலம் தனது தபால் ஓட்டை பதிவு செய்தார்.
தபால் ஓட்டை பதிவு செய்த எஸ்.பி., பிரதீப் கூறுகையில், 'ஏழு தொகுதிகளில் போலீசார் தபால் ஓட்டுக்களை பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பொதுமக்கள் ஓட்டுப்பதிவு நாளில் ஜனநாயக கடமை ஆற்ற தவற வேண்டாம்'' என்றார்.
இந்நிலையில் இன்று(ஏப்.,20), நாளை (ஏப்.,21) மாலை 5:00 மணி வரை போலீசார், ஆயுதப்படை, பிற மாவட்ட போலீசார் தங்கள் தபால் ஓட்டுப்பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
