ADDED : மார் 26, 2026 08:00 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வு போலீஸ், முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 4 ஆயிரத்து 300 பேரை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இவர்களுக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஓய்வு போலீசார், முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வு போலீசார், ஊர்காவல் படை வீரர்கள், சி.ஆர்.பி.எப்.,வீரர்கள் என 4300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்தப்பகுதி டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ளன.
சி.ஆர்.பி.எப்.உதவி காமாண்டன்ட் ராதா தலைமையில் 76 பேர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மேலும் 5 கம்பெனி சி.ஆர்.பி.எப்.வீரர்கள் திண்டுக்கல் வருகின்றனர். ஏப்.6ல் ஒரு குழுவும், ஏப்.13ல் 4 குழுவும் வர உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தேவையின் அடிப்படையில் கூடுதல் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் வரவழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் கூறினர்.
