ADDED : ஆக 25, 2026 12:52 AM
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜக்காபட்டியில் அரசு உதவி பெறும் இந்து நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 11 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
நேற்று இப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இது தொடர்பான வீடியோ பரவியது. இப்பள்ளியில் துாய்மை பணிக்கென இருவர் பணியாற்றும் நிலையில் மாணவியை சுத்தம் செய்ய வைத்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பொறுப்பு தலைமை ஆசிரியர் அங்குலட்சுமியிடம் கேட்டபோது, 'பள்ளிக்கு சீக்கிரம் வந்த மாணவி 3ம் வகுப்பு குழந்தைகள் வெளியே காத்திருப்பதை பார்த்துள்ளார்.
இதனால் அவராகவே வகுப்பறையை சுத்தம் செய்துள்ளார். ஆசிரியர்கள் யாருக்கும் இது தெரியாது. அவரை வகுப்பறையை சுத்தம் செய்ய யாரும் கூறவில்லை' என்றார்.
