/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாண்டிக்குடியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு; 'பவுன்சர்கள்' அடாவடி
/
தாண்டிக்குடியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு; 'பவுன்சர்கள்' அடாவடி
தாண்டிக்குடியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு; 'பவுன்சர்கள்' அடாவடி
தாண்டிக்குடியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு; 'பவுன்சர்கள்' அடாவடி
ADDED : மே 04, 2025 07:14 AM

தாண்டிக்குடி: கொடைக்கானல் தாண்டிக்குடியில் த.வெ.க., தலைவர் விஜய் படப் பிடிப்பில் பவுன்சர்களின் அடாவடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக மே 1ல் விஜய் வந்தார். அவர் தங்கி உள்ள விடுதி, படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் அவரது தனியார் பாதுகாப்பு குழுவினர் (பவுன்சர்கள்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் விடுதி படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு அருகே உள்ள ரோட்டில் பொதுமக்கள், விவசாயிகள். வனத்துறை ஊழியர்கள், வாகனங்களை அனுமதிக்காது அடாவடியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் தங்களது அன்றாட பணியில் பாதிப்பு ஏற்பட பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தாண்டிக்குடி அரசன்கொடை செல்லும் ரோட்டில் உள்ள கன்னிமாதுறையில் படப்பிடிப்பு நடக்கும் நிலையில் 3 கி. மீ., முன்னரே பவுன்சர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு அனைத்து தரப்பினரையும் விசாரணை செய்து திருப்பி விடுகின்றனர்.
அரசன்கொடையில் உள்ள கதவுமலைநாதன் சிவன் கோயிலுக்கு வந்த பக்தர்களையும் திருப்பி அனுப்பினர்.
படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் உள்ள அழிஞ்சி ஓடை வனப்பகுதியில் ரோந்து சென்ற வனக்காப்பாளரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரு நாட்களாக பவுன்சர்களின் இத்தகைய செயல் தொடர்கிறது. படப்பிடிப்பு பாதுகாப்பு பணியில் தாண்டிக்குடி போலீசார் ஈடுபட்ட போதும் பவுன்சர்களின் செயல்பாட்டை கண்டிக்காது வேடிக்கை பார்க்கின்றனர். படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் பாதுகாப்பு என்பது தேவை என்ற நிலையில் அதனருகே உள்ள ரோட்டில் செல்லும் பொது மக்களை தடுத்து நிறுத்துவது எவ்வகையில் நியாயம் என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
விவசாயி கண்ணன் கூறுகையில்,''விஜய் படப்பிடிப்பு நடக்கும் நிலையில் 3 கி. மீ., முன்னதாக ரோட்டில் பவுன்சர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவ்வழியே செல்லும் தங்களை செல்ல விடாமல் தடுத்தும், விசாரணை செய்து நீண்ட அலைக்கழிப்புக்கு பின் தங்களை தோட்ட பகுதிக்கு அனுமதிக்கின்றனர்.
சினிமா படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் நாங்கள் அத்துமீறி செல்லவில்லை. இருந்தபோதும் எங்களது அன்றாட தோட்ட வேலைகள் பாதிக்கும் வகையில் பவுன்சர்களின் செயல்பாடு உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். கொடைக்கானல் ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு கூறுகையில், ''தாண்டிக்குடியில் உள்ள தனியார் தோட்டத்தில் படப்பிடிப்பு நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வழியே செல்லும் ரோட்டில் பொதுமக்களை செல்லவிடாமல் தடுக்கக்கூடாது.
இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.