UPDATED : செப் 09, 2026 10:11 PM
ADDED : செப் 09, 2026 09:00 PM
பழநி:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே குடும்ப தகராறில் மாமனாரை குத்திக் கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பழநி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஒட்டன்சத்திரம் அருகே அரசபிள்ளைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வேலுச்சாமி 56. இவரது மனைவி கலைச்செல்வி 51. இவர்களுக்கு ஒரு மகன்,மகள் உள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக கலைச்செல்வி தனது கணவரை பிரிந்து தந்தை கருப்பண கவுண்டர் வீட்டில் வசித்து வந்தார். 2019 மார்ச் 25ல் அரசபிள்ளைபட்டியில் தெருவில் நடந்து சென்ற கலைச்செல்வியை வேலுச்சாமி தாக்கினார். இதை தட்டிக்கேட்ட மாமனார் கருப்பண கவுண்டரை கத்தியால் குத்தி கொலை செய்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை பழநி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி குற்றவாளி வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து வேலுச்சாமி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
