ADDED : பிப் 27, 2026 06:47 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார போக்குவரத்துஅலுவலகத்தில் ரூ.5.78 லட்சம் மதிப்பில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வு தளம் நேற்று திறக்கப்பட்டது. குறைந்தபட்சம் 60 மதிப்பெண் எடுத்தால் லைசென்ஸ் பெறலாம் என அதிகாரி தெரிவித்தார்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு முறையை கணினிமயப்படுத்தும் பொருட்டு தானியங்கி தேர்வு மையங்கள் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் ரூ.1.27 கோடி செலவில் தானியங்கி தேர்வு மையங்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.5.78 லட்சம் மதிப்பீட்டில் டூவீலர், கார் ஓட்டுநர் தேர்வுக்காக 8 ஹச்' வடிவ சாலை, டிராபிக் சிக்னல், சென்சார் கேட், நவீன கேமராக்கள் கட்டமைக்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல், மதுரை, கோயம்புத்துார், மார்த்தாண்டம் உள்ளிட்ட 7 இடங்களில் பணிகள் நிறைவு பெற்ற கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் காணொலி வழியாக திறந்து வைத்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி,வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சண்முக ஆனந்த், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை கலந்துகொண்டனர். வட்டார போக்குவரத்து அலுவலர்கண்ணன் கூறியதாவது: லைசென்ஸ் பெற விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் பதிவு விவரம் கணினியில் பதிவேற்றம் செய்தவுடன் டிராக்கிங் சிப் டேக்' வழங்கப்படும். அதை டூவீலர், காரில் ஒட்டிவைத்து டிராபிக் விதிகளை பின்பற்றி தேர்வில் பங்கேற்கவேண்டும். அவர்களின் ஓட்டும் திறன் தானியங்கி தளத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டு ஆட்டோமேட்டிக்காக மதிப்பெண் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் கணினியுடன் இணைக்கப்பட்ட டிராக்கிங் சிப் டேக்'மூலம் கணக்கிடப்படுகிறது. எனவே முறைகேட்டிற்கு இடமிருக்காது. குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் எடுத்தால் லைசென்ஸ் பெறலாம்.
குறைவாக மதிப்பெண் எடுத்து தோல்வியடைபவர்களுக்கு மொத்தம் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். 3 வாய்ப்புகளிலும் தோல்வி அடைந்தால் அவர்கள் மீண்டும் புதிதாக எல்.எல்.ஆர். விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்கலாம் என்றார்.

