லேசான காற்று மழைக்கே உடையும் மின்கம்பங்கள் ஆபத்து:தரமான கம்பங்கள் மாற்றி அமைக்க வலியுறுத்தல்
லேசான காற்று மழைக்கே உடையும் மின்கம்பங்கள் ஆபத்து:தரமான கம்பங்கள் மாற்றி அமைக்க வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 22, 2026 05:01 PM
ADDED : ஜூன் 22, 2026 04:42 PM

வேடசந்துார்:மாவட்டத்தில் புதிதாக நடப்படும் மின்கம்பங்கள் லேசான காற்று மழைக்கே தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்து விழுகின்றன. அசம்பாவிதங்களை தவிர்க்க தரமான கம்பிகள், சிமென்டால் தயாரித்த மின்கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன் மின் விநியோகம் செய்வதற்காக நடப்பட்ட மின்கம்பங்கள் ஆர்.சி.சி., (ரீஇன்போர்ஸ்டு சிமென்ட் கான்கிரீட்) முறையில் தரமான சிமென்ட் கான்கிரீட், இரும்புக்கம்பிகளை பயன்படுத்தி தயார் செய்யப்பட்டன. இந்த மின்கம்பங்கள் காற்று, மழை, புயலை தாங்கி இன்றளவிலும் வலுவான நிலையில் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைக்கு வந்துள்ள மின்கம்பங்கள் பி.எஸ்.சி., (பிரீஸ்டெரஸ்டு கான்கிரீட்) முறையில் தயாரிக்கப்பட்டவை. இந்த வகை மின்கம்பங்கள் முந்தைய மின்கம்பங்களை விட உறுதியானது என கூறப்பட்டாலும் பயன்பாட்டில் அவ்வாறு இல்லை.
தற்போதைய மின்கம்பங்கள் வாகனங்களில் ஏற்றி இறக்கும் போதே உடையும் நிலையில் உள்ளன. அதை நட்டு முடித்த பிறகு லேசான காற்று மழைக்கே தாங்குவதில்லை. சிறிய மோதலை கூட தாங்க முடியாமல் ஆங்காங்கே உடைந்து விழுகின்றன.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை என்பது ஒருபுறம் இருந்தாலும் இந்த வகை மின்கம்பங்களின் நிலையை கருதியே லேசான காற்று, மழை அடித்தாலே மின் தடையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அசம்பாவிதங்களை தவிர்க்க தரமான சிமென்ட், இரும்பு கம்பிகளை பயன்படுத்தி தயார் செய்த மின்கம்பங்களை நடவும், பழைய மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
----------
அரசின் கவனத்திற்கு...
கடந்த காலங்களில் 16, 18 எம்.எம்., என வலுவான கான்கிரீட் கம்பிகளை கொண்டு ரிங் கட்டி மின்கம்பங்கள் தயாரித்து நடப்பட்டன. இந்த கம்பங்கள் தான் இன்னும் வலுவாக உள்ளன. சமீபகாலமாக மிக லேசான மின்கம்பங்களை மாவட்டம் முழுவதும் நட்டு வைத்துள்ளனர்.
இந்த மின்கம்பங்கள் போதிய வலுவின்றி லேசான மோதலை கூட தாங்க முடியாமல் ஆங்காங்கே உடைந்து விழுகின்றன. வரும் காலங்களில் தரமான கம்பிகள், சிமென்ட், துாய தண்ணீரில் மின்கம்பங்களை தயாரித்து நட வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இதில் கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வன், பொருளாளர், வேடசந்துார் வட்டார விவசாயிகள் நலச்சங்கம்.
