ADDED : மே 31, 2026 11:11 PM
கள்ளிமந்தையம்: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே நின்ற அரசு பஸ் மீது மற்றொரு அரசு பஸ், ஆம்னி பஸ் மோதியதில் அரசு பஸ் டிரைவர் பலியானார். பயணிகள் ஆறு பேர் காயமடைந்தனர்.
தாராபுரம்- - ஒட்டன்சத்திரம் ரோட்டில் கள்ளி மந்தையம் எல்லபாளையம் அருகே உள்ள ஓட்டலில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு டீ குடிப்பதற்காக கோவையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. அதற்கு பின்புறம் மேலும் ஒரு அரசு பஸ் ஒன்று நின்றது. அப்போது அதே திசையில் வந்த ஆம்னி பஸ்சை ஓட்டலில் டிரைவர் நிறுத்த முற்பட்டபோது அரசு பஸ் மீது மோதியது. அந்த பஸ் முன்புறம் நின்ற கோவை - மதுரை அரசு பஸ் மீது மோதியது.
இதில் அந்த அரசு பஸ்சின் டிரைவரான நீலகிரி எடப்பள்ளியை சேர்ந்த ஜோதி 48, பலியானார். இதில் பயணித்த திருச்சியை சேர்ந்த கவின், ஜோதி, ஜெயித்தா, கோவையை சேர்ந்த மாரீஸ்வரி, சுப்புலட்சுமி, சுமதி காயமடைந்தனர். இவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் . கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
