தொகுதி வாரியாக மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
தொகுதி வாரியாக மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
ADDED : ஏப் 16, 2026 09:50 PM
திண்டுக்கல்:மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளிலும் மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் தொகுதிகள் வாரியாக பழநி 339, ஒட்டன்சத்திரம் 314, ஆத்துார் 341, நிலக்கோட்டை 305, நத்தம் 359, திண்டுக்கல் 316, வேடசந்துார் 327 என 2301 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் வி.வி.பேட் இயந்திரங்கள் சில நாட்களுக்கு முன்பு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பழநி, ஆத்துார், நிலக்கோட்டை, வேடசந்துார் தொகுதிகளில் தலா 11 , ஒட்டன்சத்திரம் 10 , திண்டுக்கல் 16 பேர், நத்தத்தில் 17 பேர் போட்டியிடுகின்றனர்.இதில் திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் 2 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், மற்ற 5 தொகுதிகளில் தலா ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து 7 சட்டசபை தொகுதிகளிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி துவங்கியது.
தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‛சின்னம் பொருத்தும் பணியில் 35 மண்டல அதிகாரிகள் உட்பட 100க்கு மேற்பட்ட பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுப்பதிவின் போது இயந்திரம் பழுது ஏற்பட்டாலோ, வேலை செய்யவில்லை என்றாலோ மாற்று ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரம் வழங்க ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுச்சாவடி எண்ணிக்கைக்கு ஏற்ப 20சதவீதம் இருப்பு வைக்கப்படுகிறது.வி.வி.பேட் இயந்திரம் 30 சதவீதம் இருப்பு வைக்கப்படுகிறது. சின்னங்கள் பொருத்தும் பணி நிறைவுபெற்றதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 5 சதவீதம் இயந்திரங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்படும்' என்றனர்.
