ADDED : செப் 21, 2025 04:41 AM
திண்டுக்கல்: ''சுயமரியாதைக்கு பொருத்தமானது தி.மு.க., தான்,'' என அமைச்சர் பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பாக ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் எனும் தலைப்பில் தோமையார்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்திய அரசு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய அரசுகளின் மீது பிரிவினைவாதத்தை துாண்டி அதில் வெற்றி பெற நினைக்கிறது.
அது நடக்காது. 2026ல் 200 தொகுதியில் வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு மேல் வெற்றி கிடைப்பது பூத் கமிட்டி பொறுப்பாளர்களான உங்கள் கையில் தான் உள்ளது. தி.மு.க., தொண்டன் பணம், சாப்பாடு எதையும் எதிர்பார்க்க மாட்டான். அவன் சுயமரியாதை மட்டும்தான் எதிர் பார்ப்பான். அது தி.மு.க.,வை தவிர வேறு எந்த இயக்கத்திலும் பார்க்க முடியாது. சுயமரியாதைக்கு பொருத்தமானது தி.மு.க.,தான். எழுச்சி என்ற வார்த்தை உருவானதற்கு காரணமான தி.மு.க., மக்களுக்காக ஆற்றிய பணிகளை பட்டியலிட்டால் அளவிட முடியாது. மத்திய அரசு தி.மு.க., மீது வழக்கு போட்டு அடக்கிவிடலாம் ஒடுக்கிவிடலாம் என நினைக்கிறது. ஆனால் அப்படி நினைத்தால் நிச்சயம் எந்த இயக்கமும் தேர்தல் களத்தில் நிற்க முடியாத நிலை ஏற்படும் . தமிழகம் தான் தைரியமாக மத்திய அரசை எதிர்த்து நிற்கிறது 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு பணம் அனுப்பவில்லை என்றார் .
கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் பேசினார்.
மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி, மாநகர நிர்வாகிகள் முகமது இப்ராஹிம்,அழகர்சாமி, முகமது சித்திக், மீடியா சரவணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், விவசாய அணி அமைப்பாளர் கண்ணன் , இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
