பொய் பிரசாரத்தை நம்பி ஏமாந்து விடாதீர்; - தி.மு.க.,வேட்பாளர் செந்தில்குமார்
பொய் பிரசாரத்தை நம்பி ஏமாந்து விடாதீர்; - தி.மு.க.,வேட்பாளர் செந்தில்குமார்
ADDED : ஏப் 20, 2026 11:26 PM
திண்டுக்கல்::''மக்கள் பொய் பிரசாரத்தை நம்பி ஏமாந்துவிடக்கூடாது '' என திண்டுக்கல் தி.மு.க.,வேட்பாளர் செந்தில்குமார் பேசினார்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரியக்கோட்டை, சக்கிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, அச்சராஜக்கப்பட்டி பகுதிகளில் மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்த தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் பேசியதாவது: திண்டுக்கல் தொகுதியில் சாலைகளின் உள்கட்டமைப்பு வசதி பெருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உங்கள் ஆதரவுடன் எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றதும் கிராமங்கள்தோறும் சாலை வசதி மேம்படுத்தப்படும்.
ரூ.250 கோடியில் முள்ளிப்பாடியிலிருந்து ம.மூ.கோவிலுார், பெரியக்கோட்டை, தோட்டனுாத்து, அடியனுாத்து வழியாக பஞ்சம்பட்டி செல்லும் சுற்றுச்சாலை அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. 2 ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதியை பெற்று பணிகளை முடிக்க உள்ளோம்.அ.தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசன் மக்களை ஏமாற்றும் விதமாக டோக்கன், செக் மாதிரிகளை கொடுத்து ஏமாற்றுகிறார். நடிகர் விஜய் பா.ஜ.,வோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு செயல்படுகிறார்.
ஆகவே அவர்களை ஆதரித்து உங்களின் ஓட்டை வீணாக்காதீர்கள். முதல்வர் ஸ்டாலின் நிர்வாகத்தில் பொருளாதாரம், உற்பத்தி என பல துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் உள்ளது. சொன்னதை செய்ததுடன் சொல்லாததையும் முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார். உங்களின் ஒவ்வொரு ஓட்டும் தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் தொடர்வதற்காகவும் முதல்வர் ஸ்டாலினின் கரங்களை வலுபடுத்துவதற்காகவும் பயன்படுத்தவேண்டும் என்றார்.
