ADDED : பிப் 18, 2025 05:36 AM

கொடைக்கானல்,: கொடைக்கானல் மலைப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் பச்சை பட்டாணி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் பட்டாணி நடவு செய்யப்பட்டது. தற்போது அறுவடை பருவத்தை எட்டி உள்ளது.
இவை மதுரை உள்ளிட்ட பிற மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது. துவக்கம் முதலே பட்டாணிக்கு சரிவர விலை கிடைக்காத நிலை நீடிக்கிறது.
தற்போது கிலோ ரூ.25 முதல் 30 வரை விலை போகிறது. பராமரிப்பு, களப்பணிகளுக்கு ஏராளமான செலவு செய்த நிலையில் தற்போதைய விலை நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்கெட்டில் விலை குறைந்த போதும் சில்லரை விலையில் ரூ.80க்கு குறையாமல் பட்டாணி விற்கப்படுகிறது.
விவசாயி கோபால் கூறுகையில்,'' கொடைக்கானல் மேல் மலைப் பகுதியில் ஏராளமான ஏக்கரில் பட்டாணி நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு வந்துள்ளது.
இதன் செலவு கணக்கிடும் நிலையில் ரூ.50க்கு குறைவாக விற்றால் நஷ்டம் ஏற்படும் நிலையே உள்ளது. தற்போது பெங்களூருவில் ராஞ்சி பட்டாணி இறக்குமதி ஆவதால் தற்போது கொடைக்கானலில் விளையும் பட்டாணி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மதுரையில் கிலோ ரூ.25க்கு பட்டாணிக்கு விலை போவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கிறோம். 2024ல் கிலோ ரூ. 100க்கு குறையாமல் விற்றது.
இன்னும் சில வாரங்களில் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் பட்டாணி தற்போது அறுவடை செய்யும் பணியை தளராமல் செய்து வருகிறோம் ''என்றார்.

