ADDED : பிப் 02, 2026 05:32 AM

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் ஒட்டன்சத்திரம் தாலுகா 314 பயனாளிகள், பழனி தாலுகா 484 பயனாளிகள் என மொத்தம் 798 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கும், அடிப்படை தேவைகளான ரோடு வசதிகளை மேம்படுத்த ரூ.1088 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7323 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன., என்றார்.
தமிழ்நாடு நுகர்பொருள் மண்டல மேலாளர் சிற்றரசு, ஒட்டன்சத்திரம் தாசில்தார்கள் சஞ்சய் காந்தி, பிரசன்னா, வட்டார வளர்ச்சி அலுவலர் தாஹிரா, தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றியச் செயலாளர்கள் தர்மராஜ், பாலு, பொன்ராஜ், சுப்பிர மணி, தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

