/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனத்தில் குப்பை: டி.எப்.ஓ., பேச்சால் மோதல்
/
வனத்தில் குப்பை: டி.எப்.ஓ., பேச்சால் மோதல்
ADDED : ஜன 22, 2026 05:44 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரகாசபுரத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள குப்பை வனப்பகுதியில் குவிந்ததால் இதை அகற்ற டி.எப்.ஓ., சர்ச்சை பேச்சால் இரு துறைகள் இடையே மோதல் ஏற் பட்டுள்ளது.
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை பிரகாசபுரம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு மக்கும், மக்காத குப்பை பிரித்தெடுக்கப்படுகின்றன. இவ்வாறாக ஆண்டுக்கணக்கில் குவிக்கப்பட்ட குப்பை சீராடுகானல் வனப்பகுதியில் 20 மீ., அளவிற்கு மலை போல் குவிந்துள்ளது. பிரகாசபுரம் மக்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க கொடைக்கானல் டி.எப்.ஓ., யோகேஷ் குமார் மீனா ஆய்வு செய்தார். வனப் பகுதியை ஆக்கிரமித்து குப்பை கொட்டப்பட்டது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
3 தினங்களுக்குள் குப்பையை அகற்றவேண்டும். மீறும் பட்சத்தில் நகராட்சி அதிகாரிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுத்தார்.இதை தொடர்ந்து நகராட்சிக்கு வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.
அதிகாரிகள் அதிருப்தி டி. எப். ஓ.,வின் கடுமையான பேச்சால் நகராட்சி அதிகாரிகள் அதிருப்தியடைந்தனர். குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியபோதும் டி.எப்.ஓ., பேச்சு வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர். இதன்பின் நகராட்சி கமிஷனர் சங்கர், பொறியாளர் செல்லத்துரை, நகர் அலுவலர் தினேஷ் குமார் குப்பை கிடங்கில் ஆய்வு செய்தனர். குப்பையை அகற்ற டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் குப்பை அகற்றப்படும் எனவும் தெரிவித்தனர். வனத்துறையின் நடவடிக்கையை தொடர்ந்து நகராட்சி சார்பில் நகர்பகுதியில் சுற்றி திரியும் காட்டுமாடு, காட்டுப் பன்றிகளால் நாள்தோறும் பொதுமக்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது. இது குறித்து வனத்துறையிடம் விளக்கம் கேட்கப்படும் என கூறும் நிலையில் இரு துறையிடம் மோதல் போக்கு ஏற் பட்டுள்ளது.

