ADDED : செப் 14, 2026 07:21 PM
திண்டுக்கல்: மாவட்டத்தில் இடி, மின்னலுடன் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கோடை வெப்பம் தணிந்து, பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மேற்கு திசைக் காற்று மாறுபாடு காரணமாக, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.அதுபோல் திண்டுக்கல்லில் நேற்று மாலை 5:15 மணிக்கு திடீரென வானம் இருண்டு கருமேகக்கூட்டங்கள் மழைக்கு அச்சாரமிட்டன. 5:30 மணி முதல் லேசான துாறலாக பெய்ய துவங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டியது. இடி, மின்னலுடன், பலத்த காற்று வீசியதால் காய்ந்த மரக்கிளைகள், தென்னை மட்டைகள் ஒடிந்து விழுந்தன. நகரில் முக்கிய இடங்களான ஜி.டி.என்., சாலை, ஏ.எம்.சி., ரோடு, பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி ரோடு, தமிழ் சாலை, மெங்கில்ஸ் ரோடு, நாகல் நகர், ஆர்.எம்., காலனி ரவுண்டானா, பழநி ரோடு, யானைத்தெப்பம், மார்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.கால்வாய்கள் நிரம்பி ரோடுகளில் தேங்கிய மழை நீரோடு கலந்து நின்றதால் பள்ளம் மேடு தெரியாமல் வாகனங்கள் மிதமான வேகத்தில் ஊர்ந்த படி சென்றன. பகலில் வெயிலின் கொடுமையால் அவதியுற்ற பொது மக்கள், மாலையில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்ததில் மகிழ்ச்சி அடைந்தனர். இது போல் கொடைரோடு, நத்தம், ஆத்துார், வேடசந்துார், கன்னிவாடி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழநி பகுதிகளிலும் மழை பெய்தது.
