ADDED : மே 03, 2026 03:54 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 7 வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதேநேரம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் நேற்று மாலை 5:15 மணி முதல் பலத்த காற்று வீசியது.
இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் காய்ந்த மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. 6:30 மணிக்கு மிதமாக துவங்கிய மழை இடி, மின்னலுடன் கனமழையாக மாறியது.
நகரின் ஜி.டி.என்.சாலை, ஏ.எம்.சி.ரோடு, பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி ரோடு, தமிழ் சாலை, மெங்கில்ஸ் ரோடு, நாகல் நகர், ஆர்.எம்.காலனி ரவுண்டானா, பழநி சாலை, யானைத்தெப்பம், மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.
சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.பகலில் வெயிலின் கொடுமையால் அவதியுற்ற மக்கள் மாலையில் பெய்த மழையால் நிம்மதி அடைந்தனர்.
இதுபோல் கொடைரோடு, நத்தம், ஆத்துார், வேடசந்துார், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பழநி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், பெரியகோட்டை, காவேரிஅம்மாபட்டி சுற்றி கிராம பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. ஒட்டன்சத்திரம் பகுதியில் மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.
தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மழையால் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
