. உங்களுக்காக உழைக்கும் எம்.எல்.ஏ.,வாக இருப்பேன்;செந்தில்குமார் உத்தரவாதம்
. உங்களுக்காக உழைக்கும் எம்.எல்.ஏ.,வாக இருப்பேன்;செந்தில்குமார் உத்தரவாதம்
ADDED : ஏப் 11, 2026 08:39 PM

திண்டுக்கல்:''திண்டுக்கல் தொகுதி மக்களாகிய உங்களுக்காக உழைக்கும் எம்.எல்.ஏ.,வாக இருப்பேன்'' என கூறி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் ஓட்டுசேகரித்தார்.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி, மேற்கு கோவிந்தாபுரம், அசோக் நகர், சமயபுரத்து மாரியம்மன் கோயில், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் ஓட்டு சேகரித்த தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் பேசியதாவது: 5 ஆண்டில் தி.மு.க., மக்களுக்கு செய்த திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்கிறோம். ஆனால் இந்த தொகுதியில் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து 10 ஆண்டுகள் இருந்த சீனிவாசன் சொல்லும் அளவுக்கு மக்களுக்காக எந்த திட்டத்தையும் செய்யவில்லை. 12 நாட்களாக பல கிராமங்களுக்கு சென்று பிரசாரம் செய்ததில் தொகுதியில் 80 சதவீத கிராமங்களில் குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லை.மாநகராட்சி பகுதியிலும் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பேரணை, காமராஜர் அணை, காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலமாக தேவையை ஈடுசெய்ய முடியவில்லை. திண்டுக்கல் தொகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைகை அணையில் இருந்து தனி பைப்லைன் மூலம் ரூ.655 கோடியில் குடிநீர்திட்டம் செயல்படுத்த மதிப்பீடு தயார் செய்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான திட்டங்களை பற்றி தி.மு.க., பேசுகிறது. ஆனால் அ.தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசன் பழநி தொகுதியை விட்டு நான் எதற்கு திண்டுக்கல் வந்தேன் என கேட்கிறார். இதற்கான பதில் மக்களின் ஆதரவோடு எம்.எல்.ஏ.,வாக நான் இங்கு பணியாற்றும்போது தெரியும். உங்களுக்கு உழைக்கிற எம்.எல்.ஏ.,வாக நான் இருப்பேன் என்றார்.
