/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில் பெட்டிகளை மாற்ற வலியுறுத்தல்
/
ரயில் பெட்டிகளை மாற்ற வலியுறுத்தல்
ADDED : பிப் 15, 2026 05:38 AM
ஒட்டன்சத்திரம்: பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் பழைய பெட்டிகளுக்கு பதிலாக புதிய பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு தினமும் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் , ஏசி படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ,பொதுப் பெட்டிகள் உள்ளன. இதில் உள்ள பெட்டிகள் அனைத்தும் சேதமாகிவிட்டன. பல பெட்டிகளில் ஜன்னல்களை தாங்கிப் பிடிக்கும் கிளிப்புகள் இல்லை. பலவற்றில் இருக்கைகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. கழிப்பறைகள் சுத்தம் இன்றி காணப்படுகிறது.
ரயில் முதல் முதலில் தனது பயணத்தை தொடங்கிய போது இருந்த பெட்டிகளே இன்றளவும் மாற்றப்படாமல் இயக்கப்பட்டு வருகிறது. ஏசி பெட்டிகளிலும் அதற்குரிய வசதியில்லை. சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் போது தடதடவென பெட்டிகள் பயங்கர சத்தத்துடன் செல்வதால் பயணிகள் துாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
தினந்தோறும் அனைத்து வகுப்புகளிலும் உள்ள சீட்டுகள் நிரம்பி விடுகிறது. இதன்மூலம் ரயில்வேக்கு கணிசமான வருமானம் கிடைத்த போதிலும் போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சேதமடைந்த பழைய பெட்டிகளை மாற்ற ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

